நாகை: நாகையில் மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி வணிகர்களின் 24 மணி நேர முழு கடையடைப்பு இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. நாகையில் புதிய மருத்துவக் கல்லூரிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பூர்வாங்க பணிகள் தொடங்கப்படவுள்ளன. இந்நிலையில் இந்த கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இதனால் திட்டமிட்டபடி நாகையில் மருத்துவக் கல்லூரி பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி இந்த கடையடைப்பு நடைபெறுகிறது. நாளை காலை 6 மணி வரை கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகள், வாடகை வேன்கள், கார்கள் மற்றும் ஆட்டோக்களும் ஓடாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.