சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கர்நாடகாவில் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் சி மற்றும் டி பிரிவு வேலைவாய்ப்புகளை முழுக்க, முழுக்க கன்னடர்களுக்கே வழங்க வேண்டும் என்று அம்மாநில அரசு ஆணையிட்டிருக்கிறது. ஆந்திராவில் தனியார் நிறுவன பணிகளில் 75 சதவீதம் உள்ளூர் இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தெலங்கானாவில் தனிச்சட்டம் எதுவும் இல்லை என்றாலும், ஐதராபாத் தவிர பிற பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கினால், அரசு சலுகைகள் வழங்கப்படுகின்றன.