கோபிச்செட்டிபாளையம்: கோபிச்செட்டிபாளையம் அருகே அய்யம்பாளையத்தில் வார்டு வரையறையில் குளறுபடி நடந்திருப்பதாக கூறி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அய்யம்பாளையத்தில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் மொத்தம் 20,000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஒன்றாவது வார்டில் மட்டும் 1,443 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள், கடந்த 2011 தேர்தலுக்கு முன்பு வரை கலைவாணர் வீதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து வந்தனர். தற்போது, வார்டு வரையறை செய்யப்பட்ட நிலையில், அவர்கள் வேறு வேறு வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கும் வகையில் குளுறுபடி நடந்துள்ளது. மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.