திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பு

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் அதிகாலை முதல் கோயிலில் கூட்டம் அலைமோதியது. அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. தை மாதம் தைப்பூசத் திருவிழா, மாசியில் மாசிப் பெருந்திருவிழா, பங்குனி திருவிழா, சித்திரை மாத பிறப்பு, வைகாசி விசாகத் திருவிழா என ஆண்டு தோறும் அனைத்து மாதங்களிலும் திருவிழாக்கள் நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் எப்போதும் கோயிலில் காணப்படும். வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் வார நாட்களை விட கூட்டம் அதிகரிக்கும்.

இந்நிலையில் கார்த்திகை மாதம் தொடங்கியது முதல் கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் திருச்செந்தூர் கடலில் நீராடி முருகனை தரிசித்து செல்வது வழக்கம். இதனால் கார்த்திகை மாதம் 1ம் தேதி முதல் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கூட்டம் கோயிலில் அலைமோதியது.சபரிமலை ஐயப்ப பக்தர்கள் தைப்பொங்கலுக்கு ஓரிரு நாட்கள் முன்பு வரை வந்து செல்வர். ஐயப்ப பக்தர்கள் தினமும் கார், வேன், பஸ்களில் ஆயிரக்கணக்கில் திருச்செந்தூர் முருகனை தரிசிக்க வருவதால் கோயில் களை கட்டியுள்ளது.

Related Stories: