காற்றுமாசிலிருந்து அவங்க தப்பிக்க முடியும் அதுக தப்பிக்க முடியுமா?... மோடிக்கு ஹாலிவுட் கவர்ச்சி நடிகை கடிதம்

வாஷிங்டன்: டெல்லியின் காற்று மாசு கவலை அளிப்பதாகவும், காற்று மாசால் மனிதர்கள் ‘மாஸ்க்’ போட்டு தப்பிக்க வழியிருந்தாலும், விலங்குகள் தப்பிக்க முடியாத நிலை உள்ளதால், அவற்றயும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு பிரபல ஹாலிவுட் கவர்ச்சி நடிகை பமீலா ஆண்டர்சன் கடிதம் எழுதி உள்ளார். கடற்கரை மாடல் அழகியும், முன்னாள் பிக்பாஸ் சிறப்பு விருந்தினருமான பமீலா ஆண்டர்சன் (52), பிரதமர் மோடிக்கு விலங்குகள் நல அமைப்பான பீட்டாவின் கவுரவ இயக்குனர் என்ற முறையில் எழுதிய கடிதத்தில் கூறியதாவது: இந்தியாவில் காற்றுமாசு அதிகரித்து இருப்பது குறித்து அறிந்தேன்.

இதுபோன்ற மாசை தடுக்க, அரசின் கூட்டங்களிலும், செயல்பாடுகளிலும் சைவ உணவை மட்டுமே பரிமாற வேண்டும். மேலும், சைவ உணவின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இறைச்சி, முட்டை மற்றும் பால் ஆகியவற்றிற்காக விலங்குகளை வளர்ப்பதால், காற்றுமாசு, நீர்மாசு அதிகரிக்கிறது. இந்தியாவில் சைவ உணவுக்கு  முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை பாராட்டுகிறேன். சைவ உணவு உண்பதற்கு  இந்தியா எளிதான இடமாக உள்ளது. அரிசியின் அழகிய நிறம் மற்றும் சைவ  பிரியாணியின் மணம் ஆகியவற்றை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன்.

இந்தியாவின் உணவுகள் மிகவும் அருமையானவை மற்றும் மாறுபட்டவை. சைவ உணவு  உண்பதற்கு பூமியில் எளிதான இடம் இந்தியாதான். எனவே, சைவ உணவு உண்பதை  நீங்கள் மேலும் ஊக்குவிக்க வேண்டும். நியூசிலாந்து, சீனா, ஜெர்மனி போன்ற பிற நாடுகள் சைவ சார்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள நீங்கள் (மோடி) வலியுறுத்தி உள்ளீர். டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது கவலைகளை வெளிப்படுத்திக் கொள்கிறேன். குடிமக்கள் மற்றும் முகமூடிகளை அணியவோ அல்லது வீட்டுக்குள் தங்கவோ முடியாத விலங்குகளைப் பற்றியும் நாங்கள் கவலைப்படுகிறோம்.

சமீபத்திய அறிக்கைகளின்படி, 2050ம் ஆண்டில் 36 மில்லியன் இந்தியர்கள் வருடாந்திர கடல் நீர்மட்டம் உயர்வால் அபாயத்தை எதிர்க்கொள்ளக்கூடும். இந்தியாவில் குறைந்தது 21 நகரங்களாவது அடுத்த ஆண்டு நிலத்தடி நீர் நிலைகளை பூஜ்ஜிய அளவை எட்டிவிடும். 2030ம் ஆண்டுக்குள் 40 சதவீத இந்தியர்களுக்கு குடிநீர் இல்லாத நிலை ஏற்படும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: