சென்னை: “சட்டரீதியான விஷயங்களை பூர்த்தி செய்து விட்டு உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்” என்று மாநில தேர்தல் ஆணையத்தில் திமுக மனு அளித்துள்ளது. திமுக சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதன் பின்னர் கிரிராஜன் அளித்த பேட்டி: தமிழகத்தில் இன்றைக்கு மாவட்டங்களை பிரித்திருக்கிறார்கள். இதன் உள்நோக்கம் என்னவென்று தெரியவில்லை. மாவட்டங்களை பிரிக்காமலே தேர்தலை நடத்தியிருக்கலாம். மாவட்டங்களை பிரித்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கலெக்டர்களை நியமித்திருக்கிறார்கள். காவல் துறை அதிகாரிகளை நியமித்திருக்கிறார்கள். வருவாய் கோட்ட அதிகாரிகளை நியமித்திருக்கிறார்கள். ஆனால் உள்ளாட்சிகளிலேயே அந்தந்த மாவட்டங்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை இந்த அரசு அளிக்கவில்லை. இதன் உள்நோக்கம் என்னவென்றால் எப்படியேனும் குளறுபடிகளை உருவாக்க வேண்டும் என்று இந்த அரசு இந்த நடவடிக்கைகளை அவசர கதியில் செய்து முடித்திருக்கிறார்கள்.