கொடைக்கானல்: கொடைக்கானல் - கும்பக்கரை சாலையில் மீண்டும் ஏற்பட்ட மண் சரிவால் 10 மலைக்கிராமங்கள் தனித் தீவாக துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக தொடர்மழை பெய்து வருகிறது. அவ்வப்போது காற்றுடன் கனமழையும் பெய்வதால் பிரதான சாலைகளில் மரம் விழுந்தும், மண் சரிவு ஏற்பட்டும், பாறைகள் உருண்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த அக். 21, 26ம் தேதிகளில் கனமழை காரணமாக கொடைக்கானல் - அடுக்கம் - கும்பக்கரை சாலையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, பாறைகள் உருண்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.நேற்று அதிகாலை கொடைக்கானல் பெருமாள்மலை அருகே அடுக்கம் கிராமத்தின் முன்பகுதியில் மீண்டும் மிகப்பெரிய மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு கிடப்பதால் இருபுறமும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த சாலையைத்தான் அடுக்கம், பாலமலை, காட்டுப்பள்ளம், தாமரைக்குளம் உள்ளிட்ட 10 மலைக்கிராம மக்கள் பெரியகுளம் சென்று வர பயன்படுத்துகின்றனர்.