நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகரில் குழாய்கள் உடைந்து, ஆங்காங்கே குடிநீர் வீணாக செல்வது மக்களை வேதனை அடைய செய்துள்ளது. நாகர்கோவில் மாநகருக்கு, முக்கடல் அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அங்கிருந்து ராட்சத குழாய்கள் மூலம், கிருஷ்ணன்கோவிலில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு, சுத்திகரிப்புக்கு பிறகு, வினியோகம் செய்யப்படுகிறது. 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணை கடந்த கோடையில் வறண்டது. இதனால் நாகர்கோவில் மாநகரில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. 20 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வருவதே அபூர்வமாக இருந்தது. குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டரும், மாநகராட்சி ஆணையரும் மாறி, மாறி வேண்டுகோள் விடுத்தனர். தற்போது பெய்த மழை காரணமாக முக்கடல் அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணையில் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால், இன்னும் ஒரு வருட காலம் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்றும், அதற்குள் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் முடிவடைந்து தினமும் குடிநீர் வினியோகம் இருக்கும் என்றும், மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நாகர்கோவில் மாநகரில் பல இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் ஆறாக ஓடுகிறது. டெரிக் சந்திப்பு, கோட்டார், வடசேரி உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய சாைலகளில் குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாக சென்ற வண்ணம் உள்ளது. இந்த உடைப்பை சரி செய்ய வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை.