சேலம்: நாகர்கோவில், நெல்லையில் இருந்து ஈரோடு மார்க்கத்தில் இயக்கப்பட்ட 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள், நாமக்கல், சேலம் வழியே இனி நிரந்தரமாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம்-நாமக்கல்-கரூர் இடையே புதிதாக 85 கிலோ மீட்டருக்கு அகல ரயில்பாதை அமைக்கப்பட்டது. இந்த பாதையில் மிக குறைவான அளவில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன்படி சென்னை-மதுரை துரந்தோ எக்ஸ்பிரஸ், சென்னை-பழனி எக்ஸ்பிரஸ், பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், சேலம்-கரூர் பாசஞ்சர் ஆகிய ரயில்கள் மட்டும் சென்று வருகிறது. மாறாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு நாகர்கோவில் மற்றும் நெல்லையில் இருந்து புறப்படும் ரயில்கள், கரூர்-ஈரோடு-சேலம் மார்க்கத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களை கரூர்-நாமக்கல்-சேலம் மார்க்கம் வழியே இயக்க வேண்டும் என தென் மாவட்ட பயணிகள் தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் தற்போது ஏற்றுக் கொண்டுள்ளது. இதன்படி, நாகர்கோவில்-மும்பை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (16340, 16339), திருநெல்வேலி-மும்பை தாதர் சாளுக்கியா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (11022, 11021) இருமார்க்கத்திலும் ஈரோடு வழியே செல்வதற்கு பதிலாக கரூர்-நாமக்கல்-சேலம் வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.