ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் கடல் சீற்றத்தினால் அரிச்சல்முனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் இருந்து அரிச்சல்முனை செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் முனையில் சிங்கமுக தூணுடன் கூடிய ரவுண்டானா வளைவு அமைந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அரிச்சல்முனை பகுதியில் ஏற்பட்ட கடல் அரிப்பால் கான்கிரீட் ரவுண்டானா தடுப்பு சுவர் சரிந்து சேதமடைந்தது. இதனால் அரிச்சல்முனைக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. கடலரிப்பில் சேதமடைந்த பகுதி சீரமைக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம்தான் மீண்டும் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் தனுஷ்கோடி செல்லும் சுற்றுலாப்பயணிகள் அரிச்சல்முனை கடற்கரை ரவுண்டானா வரை, சென்று கடலுக்குள் உள்ள மணல் திட்டுகளை பார்வையிட்டு திரும்பினர். மன்னார் வளைகுடா கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில், கடந்த 2 நாட்களுக்கும் மேலாக தனுஷ்கோடி பகுதியில் கடலில் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. ரவுண்டானாவின் தடுப்பு சுவர் வரை கடல் அலைகள் வந்து செல்வதால், தடுப்பு சுவர் வரை மணல் அரிப்பும் ஏற்பட்டு வருகிறது. ரவுண்டானா சுற்றுச்சுவர் எந்த நேரத்திலும் உடையும் அபாயத்தில் உள்ளது.