மதுரை: மேயர் மற்றும் நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தும் அரசாணையை எதிர்த்த வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஐகோர்ட் கிளை தள்ளி வைத்தது. மதுரை, தாசில்தார் நகரைச் சேர்ந்த வக்கீல் முகம்மது ரஸ்வி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், அரசு சுயநலத்துடன் மறைமுகத்தேர்தலை அறிவித்துள்ளது. அவசர சட்டம் கொண்டு வந்ததில், உள்நோக்கம் உள்ளது. இந்த தேர்தல் முறையால் குதிரை பேரம் நடக்கும். கவுன்சிலர்கள் கூடி மேயர் மற்றும் தலைவரை தேர்வு செய்யும்போது, மக்களுடன் நேரடித் தொடர்பில்லாமல் போய்விடும். மறைமுகத் தேர்தல் என்பது அரசின் கொள்கை முடிவாக இருந்தாலும், எடுக்கப்பட்ட முடிவு மக்களுக்கு விரோதமானதாக இருந்தால் அதில் தலையிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு. எனவே, அரசு அவசர சட்டம் செல்லாது என்றும், தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார்.