வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் கேமரா பொருத்த அறிவுறுத்தல்: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருக்கக்கூடிய 40 மக்களவை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீலகிரி மக்களவை தொகுதியில் உள்ள ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்தது. அதேபோல ஈரோடு, விழுப்புரம் தொகுதியில் உள்ள பாதுகாப்பு அறையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமராக்கள் சில மணி நேரம் செயலிழந்தது.

இதுசம்பந்தமாக உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், கோடை வெப்பம் காரணமாக கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்ததாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கண்காணிப்பு கேமராக்கள், அதிக வெப்பத்தை தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சந்தேகம் தெரிவித்துள்ள நிலையில், மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்தது குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி, ஜெகதீஷ் சந்திரா, கலைமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்தது குறித்து அறிக்கை பெறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். கூடுதல் கேமராக்களை நிறுவும்படியும், எந்த பிரச்சனையும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்படியும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மனுதாரர் கோரிக்கை மனுவுக்கு இன்று பதிலளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், தேர்தலில் போட்டியிட்டவர்கள் எவரும் வழக்கு தொடராத நிலையில், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

The post வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் கேமரா பொருத்த அறிவுறுத்தல்: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: