மதுராந்தகம்: காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்று மதுராந்தகம் ஏரி. சுமார் 2,400 ஏக்கர் பரப்பளவும், 23.3 அடி ஆழமும் கொண்டது. மழைகாலங்களில் நிரம்பும் போது, 5 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்படும். இதன்மூலம் மதுராந்தகம், காந்திநகர், அருங்குணம், காவாதுர், தேவாதூர், முள்ளி, வளர்பிறை, முன்னூத்திகுப்பம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் 3 போகம் பாசனம் பெறும். இதுமட்டுமின்றி இந்த ஏரியில் இருந்து உயர்மட்ட கால்வாய்கள் வழியாக திறந்து விடப்படும் நீரின் காரணமாக அருங்குணம், புளியரனங்கோட்டை, லத்தூர், பவுஞ்சூர், மடையம்பாக்கம் உள்ளிட்ட பல ஏரிகள் நிரம்புகின்றன. இவ்வாறு திறக்கப்படும் நீரால் மதுராந்தகம் ஏரியின் மூலம் 3 போகம் விவசாயம் நடைபெறும். குறிப்பாக நெல், வேர்க்கடலை, வாழை, கரும்பு, கேழ்வரகு, வெற்றிலை ஆகியவை பயிரிடப்பட்டு வந்தது. தற்போதைய சூழலில் ஆண்டிற்கு ஒரு போகம் விவசாயம் செய்வதற்கே போதிய தண்ணீர் இல்லை. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இதற்கு ஏரியானது, தூர்ந்து போனதுதான் காரணம். அதாவது, ஏரியின் ஆழம் 23.3 அடி என பொதுப்பணித்துறை ஆவணங்கள் மற்றும் ஏரியில் நடப்பட்டுள்ள நீரினை அளக்கும் அளவுகோலிலும் காணப்படுகிறது. ஆனால் தற்போது சுமார் 12 அடி மட்டுமே ஆழம் உள்ளது. மீதமுள்ள 11 அடி ஆழத்திற்கு மண் தூர்ந்து விட்டது.