திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி திருவீதியுலாவுக்கு பயன்படுத்தப்படும் வெள்ளி அதிகார நந்தி வாகன பீடம் சீரமைக்கும் பணி நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 1ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்க இருக்கிறது. இதையொட்டி, தீபத்திருவிழா உற்சவம் நடைபெறும் நாட்களில், சுவாமி திருவீதியுலாவுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை பழுது நீக்கி சீரமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. அதன்படி, தீபத்திருவிழாவின் முதல் நாளான்று இரவு உற்சவத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் பவனி வந்து அருள்பாலிக்கும் வெள்ளி அதிகார நந்தி வாகனத்தின் உறுதித்தன்மை குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, வெள்ளி அதிகார நந்தி வாகனத்தை தாங்கி நிற்கும் மரத்தினால் செய்யப்பட்ட பீடம் உறுதியற்று, சிதைவுற்று இருந்தது தெரியவந்தது.