திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை தினம் மற்றும் குபேர கிரிவலத்தையொட்டி நேற்று சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு மாத பவுர்ணமி நாட்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வந்து கிரிவலம் செல்கின்றனர். இந்நிலையில், விடுமுறை தினமான நேற்று அண்ணாமாலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும், நேற்று குபேர கிரிவலம் என்பதால், குபேர கிரிவலம் செல்ல வந்திருந்த பக்தர்கள் முன்னதாக அண்ணாமலையாரை தரிசிக்க வந்ததால், நேற்று வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனம் செல்லும் வழியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கூட்டம் அதிகரித்ததால் நெரிசலில் பக்தர்கள் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த வயதானவர்களும், சிறுவர்களும் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.