வத்திராயிருப்பு: சதுரகிரி மலைப்பகுதியில் தொடர்மழை பெய்து வருவதால், கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், தாணிப்பாறைக்கு நேற்று வந்திருந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே, மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறது. இதன்படி, கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு நேற்று (நவ. 24) முதல் 27ம் தேதி வரை பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.இதையொட்டி விருதுநகர், ராஜபாளையம், சிவகாசி உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பக்தர்கள் நேற்று அதிகாலை 4 மணி முதல் தாணிப்பாறை அடிவாரத்தில் உள்ள வனத்துறை கேட் முன்பு குவியத் தொடங்கினர். காலையில் மழை அறிகுறி தென்பட்டதால், 6 மணிக்கு வனத்துறையினர் கேட்டை திறக்கவில்லை. இதனால், அவர்களுடன் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.