சென்னை: ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்றும், அடுத்தவன் மீது பழிசுமத்தி கட்சி தொடங்க கூடாது என்று பொதுக்குழுவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது: சிலர் கட்சி தொடங்குவேன் என்று சொல்கிறார்கள். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால் அடுத்தவன் மீது பழிசுமத்தி கட்சி தொடங்கவேண்டாம். அது தவறு. யார் கட்சி தொடங்கினாலும் நமக்கு கவலையில்லை. ஏனென்றால் நமது கட்சியும், ஆட்சியும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. நமது இயக்கம் உயிரோட்டமான இயக்கம். துரோகிகளை அழிப்பது தனது நோக்கம், என்று டி.டி.வி.தினகரன் கூறியிருக்கிறார். உண்மையிலேயே யார் துரோகி?. மக்களுக்கு தெரியும். அவரும், அவரது குடும்பமும் இந்த கட்சியை எப்படி பாடாய்படுத்தினார்கள். இந்த கட்சியை வீழ்த்துவேன் என்று கூறிவரும் டி.டி.வி.தினகரன் தான் துரோகி. கடலில் விழுந்த உப்பை போல அமமுக கரைந்து கொண்டிருக்கிறது. முழுவதுமாக கரைந்து போகும்போது அவர் நடுவீதியில் நிற்பார். இந்த ஆட்சியை கவிழ்க்க 18 எம்எல்ஏக்கள் அவருடன் சென்றனர். இப்போது அவர்கள் அனைவரும் நடுவீதியில் நின்று தவித்து கொண்டிருக்கிறார்கள்.