ஹாங்காங்: ஹாங்காங்கில் நேற்று நடந்த மாவட்ட கவுன்சில் தேர்தலில் அதிகமான மக்கள் வாக்களித்தனர். ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த ஜூன் மாதம் தொடங்கிய போராட்டமானது இன்னும் நீடித்து வருகின்றது. கைதிகள் பரிமாற்ற சட்டத்தை திரும்ப பெறுவதாக அரசு அறிவித்த போதிலும், ஜனநாயக உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஹாங்காங் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வன்முறை சம்பவங்கள், போலீசார் துப்பாக்கி சூடு, முகமுடி அணிந்து போராட்டம், முகமுடி அணிய தடை சட்டம் என பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், மாவட்ட கவுன்சில் தேர்தல் ஹாங்காங்கில் நேற்று நடைபெற்றது. 452 கவுன்சிலர்களுக்கான இந்த தேர்தல் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த தேர்தல் வெற்றியானது, தங்கள் குரலை மேலும் வலுபெற செய்யும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.