புதுடெல்லி: பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியாருக்கு விற்க முடிவு செய்துள்ள மத்திய அரசு, அந்த நிறுவனத்தின் மதிப்பை கணக்கிட்டு 50 நாட்களில் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்பனை மூலம் நடப்பு நிதியாண்டுக்குள் ₹1 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, பாரத் பெட்ரோலியம், ஷிப்பிங் கார்ப்பொரேஷன் உள்ளிட்ட 4 நிறுவனங்களின் பங்குகளை விற்க பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது. நடப்பு நிதியாண்டு முடிவதற்குள், அதாவது மார்ச் மாதத்துக்குள், தனியார் மயம் ஆக்கி விட வேண்டும் என்பதில் மத்திய அரசு முனைப்புடன் உள்ளது.