சென்னை: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்தியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 28ம் தேதி டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று வைகோ அறிவித்துள்ளார்.இதுகுறித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:இலங்கை தீவில், லட்சக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்த அதிபர் மகிந்த ராஜபக்சேயின் ராணுவ அமைச்சராக இருந்த ஈவு இரக்கம் அற்ற கோத்தபய, இப்போது இலங்கை அதிபர் ஆகி இருக்கிறார், முன்னாள் அதிபரை பிரதமராக அறிவித்து, அவரிடமே ராணுவப் பொறுப்பையும் ஒப்படைத்து விட்டார்.சிங்களர்களால்தான் நான் வெற்றி பெற்றேன் என்றதுடன், முதல் அறிவிப்பாக, தமிழர் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் தெருக்களில் வலம் வர வேண்டும் எனவும் கட்டளை பிறப்பித்து விட்டார். தமிழ் ஈழம் சிங்களர்களின் ராணுவக் கூடாரம் ஆகி விட்டது,காணாமல் போன தமிழர்களின் கதி என்ன, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் வாடும் தமிழர்களின் கதி என்ன என்ற வேதனை நம்மை வாட்டுகிறது.