திருமலை: ஆந்திர மாநிலம் கடப்பாவில் காருக்குள் ரகசிய அறை அமைத்து கடத்தி வந்த ₹3 கோடி மதிப்புள்ள தங்க நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திராவின் கடப்பாவில் டிஎஸ்பி சூரியநாராயணா தலைமையில் நேற்று முன்தினம் மாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடப்பா நகரில் தனியார் நகைக்கடை நடத்தி வரும் பஜ்ரங் சேட் என்பவரது வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். இதில் காரின் பின் சீட்டில் ரகசிய அறை அமைத்து நெல்லூரில் இருந்து கடப்பாவிற்கு சுமார் 6 கிலோ 930 கிராம் தங்க நகைகளை கடத்தி வந்தது தெரியவந்தது.