மஞ்சூர் : தொட்டகம்பை கிராமத்தில் அட்டகாசம் செய்த 30 குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். மஞ்சூர் அருகே உள்ள தொட்டகம்பையில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த பகுதியில் தேயிலை விவசாயத்துடன் பட்டானி, பீன்ஸ், அவரை, உருளைகிழங்கு, கேரட் உள்ளிட்ட பல வகையிலான மலை காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக இப்பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட குரங்குகள் முற்றுகையிட்டு பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. விளைநிலங்களில் புகுந்து செடிகளை பிடுங்கி பெரும் நாசம் செய்து வருவதுடன் குடியிருப்புகளில் நுழைந்து திறந்து கிடக்கும் வீடுகளில் புகுந்து தின்பண்டங்களை துாக்கி செல்வதும், பொருட்களை வாரியிறைப்பதும் வாடிக்கையாக உள்ளது.