சென்னை: பார்க்கின்சன்ஸ் மற்றும் நரம்பியல் நோய்க்கு சிறப்பு சிகிச்சை மையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். பார்க்கின்சன்ஸ் மற்றும் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட மருத்துவர் சாந்தி, இந்த நோய் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மறுவாழ்வு அளிக்கவும் எஸ்ஏஏஆர் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்நிலையில், இந்த நோய் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த வீடியோவை சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “நரம்பியல் நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மருத்துவ கல்லூரியில் நரம்பியல் நோய்க்கு சிறப்பு சிகிச்சை மையமும், அறுவை சிகிச்சை மையமும் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது” என்றார்.
ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையின் நரம்பியல் துறை தலைவர் லட்சுமி நரசிம்மர் பேசுகையில், ‘அரசு பொது மருத்துவமனையில் அளிக்கப்படும் இயக்க கோளாறு சிகிச்சையில் 4 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பயன் அடைகின்றனர். இதுபோன்ற சிகிச்சை மையம் மற்ற மாவட்டங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற மருத்துவ வசதிகள் எழை எளிய மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். நிகழ்ச்சியில் இந்திய நோயாளிகள் குழு கூட்டணி அமைப்பின் தலைவர் ரத்னா தேவி, மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு, தேசிய வேளாண் அமைப்பை சேர்ந்த ராஜசேகர், மூத்த நரம்பியல் மருத்துவர் நடராஜன், இயக்க கோளாறு நிபுணர் விஜயசங்கர், திரைப்பட இயக்குனர் விசுவாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.