காஞ்சிபுரம்: டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் மாமல்லபுரத்தில் இந்திய கலாச்சார விழா நடத்த ரூபாய் 75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் 11, 12 ஆகிய தேதிகளில் சீன அதிபர் ஷி. ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருடைய முறைசாரா சந்திப்பானது மாமல்லபுரத்தில் நடைபெற்றது. அச்சமயம் மாமல்லபுரத்தில் பல்வேறு இந்திய கலாச்சாரங்களை வெளிப்படுத்த கூடிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் தமிழக பாரம்பரிய நடனங்கள் ஆகியவை நிகழ்த்தப்பட்டன. இதனை உலகம் முழுவதும் உள்ள பல்வேறு முக்கிய பிரமுகர்கள் மற்றும் தலைவர்கள் ஆகியோர் கண்டு களித்தனர். இதன் மூலமாக தமிழக அரசின் கலாச்சாரமானது உலகளவில் எடுத்து செல்லப்பட்டதாக விழாவில் உரையாற்றிய நரேந்திர மோடியும் தெரிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில் தற்போது, வருகின்ற டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய இரண்டு மாதங்களில் இந்திய கலாச்சார விழா முழுவதுமாகவே நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர்.