கரூர்: கரூரில் ஷோபிகா இம்பெக்ஸ் என்ற கொசுவலை தொழிற்சாலையில் 4 நாட்களாக நடைபெற்று வந்த சோதனை இன்று காலை நிறைவடைந்தது. வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.80 கோடி பணம்,10 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ. 435 கோடி வரிஏய்ப்பு கண்டுபிடிப்பு
*கரூரை சேர்ந்த சிவசாமி என்பவர் ‘ஷோபிகா இம்பெக்ஸ்’ என்ற கொசுவலை தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். கரூர் வெண்ணைமலையில் கொசுவலை நிறுவனத்தின் தலைமை அலுவலகம் செயல்படுகிறது. செம்மடை என்ற இடத்தில் பேக்டரி செயல்படுகிறது. *இங்கு தயார் செய்யப்படும் கொசுவலைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிறுவனத்தின் தொழிற்சாலை, ராம்நகரில் உள்ள உரிமையாளர் வீடு, கோவை சாலை, சின்ன ஆண்டாங்கோயில் பகுதியில் உள்ள அலுவலகம் ஆகிய 4 இடங்களில் கடந்த 15ம்தேதி மதியம் 30 வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனையை தொடங்கினர்.இதில், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. *இதையடுத்து, 2வது நாளாக நேற்றுமுன்தினமும் சோதனை நடந்தது. அப்போது உரிமையாளர் சிவசாமி வீட்டில் துணிகளை அடுக்கி வைக்கும் அலமாரியில் இருந்து 35 கோடி கைப்பற்றப்பட்டது. மேலும் கணக்குகளை ஆய்வு செய்ததில் 400 கோடிக்கு வரிஏய்ப்பு செய்தது தெரிந்தது.
ரூ.80 கோடி பணம்,10 கிலோ தங்கம் பறிமுதல்*அந்த வகையில், 4 இடங்களிலும் 3வது நாளாக நேற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை தொடர்ந்தது. அந்த நிறுவனத்தின் கணக்குகளை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்தனர். மேலும் இந்த நிறுவனம் ரூ. 435 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பில் ஈடுபட்டு இருப்பதை வருமான வரித்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். *இது தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று 4வது நாட்களாக நீடித்த வருமான வரிசோதனை தற்சமயம் நிறைவடைந்துள்ளது. சிக்கியுள்ள ஆவணங்களை வங்கிக் கணக்குகளுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒப்பிட்டு வருகின்றனர்.இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 80 கோடி ரொக்கம் மற்றும் 10 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.