வேலூர்: ஆந்திர மாநில ஷோரூம்களில் தமிழக அரசின் இலவச சேலைகள் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. தமிழக அரசு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்காக ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பண்டிகையின்போது இலவசமாக வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. இதற்காக தமிழக அரசு பல கோடி ரூபாய் செலவிட்டு வருகிறது. ஆனால் இந்த சேலைகள் பெரும்பாலான பயனாளிகளை சென்றடையாமல் பதுக்கி வைக்கப்பட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், திருப்பதி நகர பிரபல துணிக்கடையில் தமிழக அரசின் இலவச சேலைகளின் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அவை அனைத்தும் கண்துடைப்பாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது இலவச சேலைகளும் தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு கொண்டு சென்று பிரபல ஷோரூம்களில் விற்பனை செய்யப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சேலைகளின் விலை 146 என்று குறிப்பிடப்பட்டு ₹38 தள்ளுபடி வழங்கி 2.57 ஜிஎஸ்டியுடன் 108க்கு படுஜோராக விற்கப்படுகிறது.