சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முயன்ற ஆந்திராவைச் சேர்ந்த 10 பெண்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். மண்டல மகர விளக்கு பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை, திறக்கப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை ஆரம்பித்துள்ளது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் செல்லலாம். ஆனால் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வி்ல் நிலுவையில் இருக்கும் காரணத்தால், சபரிமலைக்கு வரக்கூடிய இளம்வயது பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கேரள மாநில அரசு கைவிரித்துவிட்டது. இந்த நிலையில் ஆந்திர மாநிலம், விஜயவாடா பகுதியைச் சேர்ந்த 36 வயதான, சுஜாதா உட்பட 10 இளம்பெண்கள் இன்று சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக வருகை தந்தனர்.