இலுப்பூர்: அன்னவாசல் பகுதியில் அதிகமாக உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கூட்டுறவு சங்கத்தில் உரம் வாங்க நீண்ட வரிசையில் விவசாயிகள் காத்திருந்தனர். ஆதார் நகல் கட்டாயம் வேண்டும் என அலுவலர்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியில் கடந்த 5 வருடங்களாக பருவமழை சரிவர பெய்யவில்லை. கிணற்று பாசன விவசாயிகள் பெரும்பாண்மையான விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அன்னவாசல் பகுதிகளில் பெரும்பாண்மையாக ஆங்காங்னே மழை பெய்துள்ளது. குளத்தில் தண்ணீர் பெருகி உள்ள நிலையில் சம்பாநடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. தற்போது, நாற்றங்காலில் இருந்து பயிர்களை எடுத்து நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்து வருகிறது. கடந்த 1 மாத காலமாகவே அன்னவாசல் பகுதியில் கடுமையான உரம் தட்டுப்பாடு உள்ளது. தனியார் கடைகளில் உரம் கூடுதலாக விற்கப்படுகிறது. விலை அதிகமாக இருந்தாலும் உரம் கிடைப்பதில்லை. தனியார் கடைகளுக்கு வரும் சிறு குறு விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லுகின்றனர். குறைந்த பரப்பளவில் விவசாயம் செய்த சிறிய விவசாயிகள் சில்லரையில் உரம் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். உர தட்டுப்பாட்டை நீக்க அரசு வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் உரம் வழங்கி வருகிறது. உரம் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு வருவது தெரிந்த விவசாயிகள் முன்னர் வந்து உரத்தை வாங்கி சென்று விடுகின்றனர்.