காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம்: மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்கிறது தமிழக அரசு...பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்

சென்னை: தேசிய நீர் மேம்பாட்டு முகமை திட்டத்தின் கீழ் ரூ.7,677 கோடியில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்டு தமிழக அரசு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர்  தெரிவித்தார். காவிரி-அக்னியாறு-தெற்கு வெள்ளாறு-மணிமுத்தாறு-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த 2008ல் தமிழக அரசு அறிவித்தது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக, 2008ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி கரூர்  மாவட்டம் மாயனூர் கிராமம் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே ஒரு புதிய கதவணை கட்ட அப்போதைய முதல்வர் கலைஞர் அடிக்கல் நாட்டினார். இந்த தடுப்பணை 2014ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் இரண்டாவது கட்டமாக காவிரி ஆற்றின் வெள்ள நீரை அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை மற்றும் குண்டாறு ஆகிய ஆறுகளுக்கு திருப்பி விடும் திட்டத்துக்கான அறிக்கை தயார் செய்யப்பட்டது.  இந்த  திட்டத்தின்படி 258 கி.மீ தூரம் கால்வாய் அமைக்க ரூ.5,166 கோடி தேவை என மதிப்பிடப்பட்டது. இதை தொடர்ந்து, மத்திய அரசின் வெள்ள மேலாண்மை திட்டத்தின் கீழ் நிதியுதவி கோரி மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்தது. ஆனால்,  அறிக்கையில் குறைபாடுகள் உள்ளதாக கூறி மத்திய அரசு திருப்பி அனுப்பியது. மேலும், இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற முடியாது என்றும் மத்திய அரசு அறிவித்தது.

இதை தொடர்ந்து, கடந்த 2014ல் பாஜ அரசு பொறுப்பேற்ற பின், இந்த திட்டத்திற்கு நிதி பெற மீண்டும் முயற்சி செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இந்நிலையில், நில ஆர்ஜித சட்டம் கொண்டு வரப்பட்டதால், அந்த திட்டத்தின்படி நிதி கூடுதல்  ஆகும் என்பதால் அதற்கேற்றவாறு அறிக்கை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக, அரசு நிலங்கள் வழியாக இந்த திட்டத்தை கொண்டு செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டது.

இந்த அறிக்கையின்படி ரூ.7,677 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இந்த அறிக்கையை மத்திய அரசின் நிதியுதவியை பெறும் வகையில் தேசிய நீர் மேம்பாட்டு  முகமையிடம் கொள்கை அளவில் ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

தற்போது, கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியில் தேசிய நீர் மேம்பாட்டு முகமை இறங்கியுள்ளது. எனவே, இந்த திட்டம் செயல்பாட்டில் வர காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே,  காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு திட்டத்தை முன்கூட்டியே தொடங்க முடிவு செய்துள்ளோம் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: