உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் RTI சட்ட வரம்புக்குள் வருகிறதா? இல்லையா?...நாளை அதிரடி தீர்ப்பு

டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தான் ஓய்வு பெற உள்ள 17-ம் தேதிக்குள் 5 முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்க உள்ளார் என தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, அயோத்தி வழக்கில், உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியதோடு, சனிக்கிழமை அன்று தீர்ப்பு அளித்திருப்பதும் வரலாற்றில் முதல் முறை சம்பவமாகும். 69 ஆண்டு கால உச்ச நீதிமன்ற வரலாற்றில் இதுவரை எந்த ஒரு தீர்ப்பும் சனிக்கிழமையில் வழங்கப்பட்டதில்லை.

வழக்கமாக, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நீதிமன்றத்தின் பணி நாட்களாக உள்ளன. முக்கிய வழக்கு விசாரணைகள் சனிக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களிலும் நள்ளிரவு முதல் விடிய விடிய கூட நடந்திருக்கிறது. ஆனால், முதல் முறையாக தீர்ப்பு நாளை சனிக்கிழமையாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தேர்ந்தெடுத்திருப்பது கூட வரலாற்று சிறப்புமிக்கதாகி உள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அலுவலகமும் தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்குள் வருகிறது என டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்ற செயலாளர் ஜெனரல், தகவல் தொடர்பு அதிகாரி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்களின் விசாரணை நிறைவடைந்த நிலையில், தகவல் அறியும் உரிமை சட்ட வரம்பு வழக்கு குறித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் நாளை வழங்குகிறது. நாளை வெளியாகும் தீர்ப்பின் அடிப்படையில், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அலுவலகமும் தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்குள் வருமா? இல்லயா? என்பது தெரியவரும்.

இன்னும் முக்கிய 3 வழக்குகள்:

* ரபேல் ஜெட் கொள்முதலில் மோடி அரசு எந்த தவறும் செய்யவில்லை என உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு 14ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி தாக்கல் செய்த மனு மீது அடுத்த வாரம் தீர்ப்பு அளிக்கிறார்.

* ரபேல் வழக்கில் பிரதமர் மோடியை திருடன் என கூறிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது கிரிமினல் கண்டன நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீதும் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

* சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பும் வழங்கப்படுகிறது.

Related Stories: