சென்னை: தமிழகத்தில் வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் வருகிற 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய வாக்காளர் பட்டியல் வருகிற பிப்ரவரி 7ம் தேதி வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு திட்டம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி தொடங்கப்பட்டது. அதன்படி, வாக்காளர்கள் 1950 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டும், என்.எஸ்.வி.பி. என்ற செல்போன் செயலி, தனி இணையதளம், பொது சேவை மையங்கள், வாக்காளர் சேவை பிரிவுகள் ஆகியவற்றுக்கு சென்று வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்துக்கொள்ளலாம். திருத்தம் இருந்தால், வாக்காளர்களே செய்து கொள்ளலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் செப்டம்பர் 30ம் தேதி வரை என்பதை, அக்டோபர் 15ம் தேதி என்றும், பின்னர் நவம்பர் 18ம் தேதி வரை தேர்தல் ஆணையம் நீட்டிப்பு செய்தது.