சேலம்: சேலம் கந்தம்பட்டி மேம்பாலம் அருகே அண்ணாமலை பெயிண்டிங் ஒர்க் ஷாப் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் சுரேஷ். பைபாஸ் வழியாக செல்லும் லாரிகளுக்கு காற்று அடைக்கும் ஏர் கம்பரசர் ஒன்றும் ரோட்டின் அருகிலேயே வைத்துள்ளார். இந்த பெயிண்டிங் ஒர்க்ஷாப்பில் விஷ்ணுகுமார் (30), மூர்த்தி ஆகியோர் வேலை செய்கின்றனர். நேற்று காலை 9 மணியளவில் லாரி ஒன்றுக்கு விஷ்ணுகுமார் காற்று அடிப்பதற்காக ஏர் கம்பரசர் மோட்டாரை இயக்கி ஏர் பிடித்துக்கொண்டிருந்தார். அந்நேரத்தில் ஏர் கம்பரசர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், விஷ்ணுகுமார், மூர்த்தி, லாரி டிரைவர் தன்ராஜ்(55) ஆகியோர் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். ஏர் கம்பரசரின் பிரமாண்டமான மூடி வெடித்து பறந்து சென்று சுமார் 100அடி தூரத்தில் உள்ள ராமன் என்பவரின் வீட்டின் மீது விழுந்தது. வீட்டினுள் சாப்பிட்டுக் கொண்டிருந்த ராமனின் மகன் மவுலீஸ்வரன்(11), ரித்திக்(6) ஆகியோர் மீது கழன்று சென்ற மூடி விழுந்து அமுக்கியது. இதில், மவுலீஸ்வரனுக்கு கை விரல் துண்டானது. ரித்திக்கிற்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து, சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து ஏர் கம்பரசரின் உரிமையாளர் சுரேஷை கைது செய்து விசாரிக்கின்றனர்.