புதுடெல்லி: தனது தந்தை மற்றும் மாமாவுக்கு எதிரான ஆதாரங்களை தர வேண்டாம் என விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் குற்றவாளி ராஜிவ் சக்சேனாவுக்கு, மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் மருமகன் மிரட்டல் விடுத்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. விவிஐபிக்களின் பயணத்துக்காக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனவத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க 3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், பலருக்கு கமிஷன் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. கமிஷன் வாங்கி கொடுத்த ஹவாலா ஏஜென்ட் ராஜிவ் சக்சேனா, மைக்கேல் ஜேம்ஸ் ஆகியோர் துபாயில் இருந்து அழைத்து வரப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதில் ராஜிவ் சக்சேனா அப்ரூவராக மாறி சில தகவல்களை அளித்தார்.