தேனி: தேனி மாவட்டம் வருஷநாட்டில் மேகமலை வனத்திற்குள் வசிக்கும் 444 குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்திற்கு தேவையான நிலம் மற்றும் நிதியுதவி கொடுத்த பின்னர், அவர்களை வெளியேற்ற வேண்டும் என நக்சலைட் தடுப்பு பிரிவு போலீசார் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். தேனி மாவட்டம் மேகமலை வனத்தில் வருஷநாடு பகுதியில் வண்டியூர், இந்திராநகர், பொம்மராஜபுரம், அரசரடி பகுதிகளில் 444 குடும்பங்கள் வனத்திற்குள் உள்ளன. இவர்களை வெளியேற்றுவதில் வனத்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த கிராமங்கள் தற்போது நக்சலைட் தடுப்பு பிரிவு போலீசாரின் கண்காணிப்பில் உள்ளது. இந்த கிராம மக்களுக்கு தேவையான உதவிகளை பெற்றுத்தருவதில் நக்சலைட் தடுப்பு பிரிவு போலீசார் கூடுதல் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த மக்களை இங்கிருந்து வெளியேற்றும் முன்னர் இவர்களின் வாழ்வாதாரத்திற்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என வனத்துறையுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.