சேலம்: குழந்தைகள் தினமான வரும் 14ம் தேதி இரவு, பெற்றோர் ஒரு மணி நேரம் தங்களது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து, பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட பள்ளிக்கல்வித்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மாறிவரும் நவீன காலத்தில் மக்களின் வேலைப்பளு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உறவினர்களுடனான உரையாடல் குறைந்து வருகிறது. குறிப்பாக, பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் கூட நேரத்தை செலவிட வாய்ப்பில்லாமல் போகிறது. வீட்டில் இருக்கும் ஒருசில மணி நேரத்திலும், செல்போனில் மூழ்கி விடுகின்றனர். இதனால் பெற்றோருடனான குழந்தைகளின் நெருக்கமும் குறைந்து வருகிறது. இவற்றை உணர்த்தும் வகையிலும், பெற்ற தங்களது குழந்தைகளுடன் உரையாட வாய்ப்பு ஏற்படுத்தும் வகையிலும், வரும் 14ம் தேதி குழந்தைகள் தினத்தன்று, பெற்றோர்கள் தங்களது செல்போனை ஒருமணி நேரம் சுவிட்ச் ஆப் செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.