புதுடெல்லி: ஆன்லைனில் உடனடியாக பான் கார்டு பெறும் வசதியை வருமான வரித்துறை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஏற்கனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் தொலைந்து போனாலோ அல்லது சேதம் அடைந்தாலோ புதிதாக மாற்று பான் கார்டையும் பெற்றுக் கொள்ளலாம். இந்த எலெக்ட்ரானிக் பான் கார்டு (இ-பான்) எந்தவித கட்டணமும் இல்லாமல் விண்ணப்பதாரருக்கு வழங்கப்படும். ஆதார் கார்டு அடிப்படையில் இது வழங்கப்படும். ஆதார் கார்டில் உள்ள விவரங்களை சரிபார்த்த பிறகு, வருமான வரித்துறையில் இருந்து விண்ணப்பதாரரின் மொபைல் எண்ணுக்கு ஒரு முறை பாஸ்வேர்டு வரும். அதை பயன்படுத்தி விண்ணப்பதாரர் தனது பான் கார்டு விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். பின்னர் புதிய இ-பான் கார்டு பெற்றுக்கொள்ளலாம். ஆதார் அடிப்படையில் வழங்கப்படுவதால், ஆதாரில் உள்ள புகைப்படம், பெயர், தந்தை பெயர், முகவரி விவரங்கள்தான் பான் கார்டிலும் இடம்பெறும்.