குழித்துறை நகராட்சியில் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் பழுது: துப்புரவு பணி முடங்கியது

மார்த்தாண்டம்: குழித்துறை நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. நகராட்சி பகுதிகளில் குப்பைகளை ேசகரிக்க பேட்டரியால் இயங்கும் 8 வாகனங்கள் சமீபத்தில் வாங்கப்பட்டன. இந்த வாகனங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று மக்கும், மக்கா குப்பைகள் தரம்  பிரித்து சேகரிக்கப்படுகின்றன. இதற்காக நகராட்சி கூடுதல் கட்டணத்தை வீடுகள், நிறுவனங்களிடம் இருந்து வசூலித்து வருகிறது. இது தவிர பொது இடங்களில் குவியும் குப்பைகள் லாரிகள் மூலமும் சேகரிக்கப்பட்டு, உரக்கிடங்கில்  கொட்டப்படுகின்றன. நகராட்சியில் குப்பைகள் சேகரிக்க நிரந்தர பணியாளர்களோடு சமீபத்தில் 48 தற்காலிக பணியாளர்களும் நியமிக்கப்பட்டனர். இவர்கள் பேட்டரியால் இயங்கும் வாகனங்களில் வீடுகள், கடைகள் உட்பட அனைத்து  இடங்களிலும் சென்று குப்பைகளை சேகரித்து வந்தனர்.

ஆனால் குப்பைகள் சேகரிக்கும் இந்த பேட்டரி வாகனங்கள் சரியாக பராமரிக்கப்படவில்லை. இதனால் நாளடைவில் ஒவ்வொரு வாகனமாக பழுதடைய தொடங்கின. இந்த நிலையில் தற்போது 7 வாகனங்கள் பழுதாகி இயக்க முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. இதனால் வீடுகளுக்கு சென்று சரிவர குப்பைகள் சேகரிக்க முடியாத நிலை உள்ளது. ஏற்கனவே நகராட்சியில் மார்க்கெட் உள்பட பொது இடங்களில் குப்பைகள் சரிவர அள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதான பேட்டரி  வாகனங்களை சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: