ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி பெருங்குடி 14வது மண்டத்திற்கு உட்பட்ட பொதுமக்களிடம் குறைகளை கேட்டறியும் முகாம் உள்ளகரத்தில் உள்ள மண்டல அலுவல வளாகத்தில் நேற்று நடந்த்து. சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் தலைமை வகித்தார். பெருங்குடி மண்டல உதவி கமிஷனர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். இதில், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், பொதுமக்கள் மற்றும் நலச்சங்க நிர்வாகிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். அதில், புழுதிவாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்க வேண்டும், மடிப்பாக்கம் பொன்னியம்மன் கோயில் தெருவில் நடைபாதை ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை சாலையில் திரியும் மாடுகளை அகற்ற வேண்டும், சாலை, குடிநீர், பாதாள சாக்கடை கோரி மனு அளிக்கப்பட்டது. மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார்.