பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஏரியூர் ராமகவுண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் விவசாயி பெரியசாமி. இவருக்கு 2 வயதில் மித்ரா என்ற மகள் இருந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் மித்ராவுக்கு காய்ச்சல் வந்துள்ளது. இதனால் பெற்றோர் குழந்தையை ஏரியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை முடிந்த நிலையில், நேற்று இரவு மீண்டும் வீடு திரும்பி உள்ளனர். அப்போது, மருத்துவர்கள் குழந்தைக்கு மருந்து மாத்திரைகளை வழங்கினர். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில், மித்ராவின் பெற்றோர், குழந்தைக்கு உணவு கொடுத்த பின்னர் மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்து கொடுத்து குழந்தையை உறங்க வைத்துள்ளனர். தொடர்ந்து, இன்று காலை எழுந்து பார்த்த போது, குழந்தை மூச்சிபேச்சின்றி அசைவில்லாமல் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் பதறிபோய் குழந்தையை தூக்கி கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு இரவில் கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் குழந்தை இறந்ததாகவும் தெரிவித்தனர்.