கோவை: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மஞ்சகண்டி வனப்பகுதியில் கடந்த 28-ம் தேதி தண்டர்போல்ட் போலீசாருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் 4 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். காயமடைந்த 3 பேர் தப்பியோடி விட்டனர். இந்த சம்பவம் திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை என தண்டர்போல்ட் போலீசாருக்கு எதிராக பலியானவர்களின் உறவினர்கள் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து திருச்சூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 4 பேரின் உடல்களையும் தகனம் செய்ய ஐகோர்ட் தடை விதித்தது. இதற்கிடையே நேற்று காலை அதே பகுதியில் உள்ள வைத்திரி என்ற இடத்தில் 2 மாவோயிஸ்ட்கள் துப்பாக்கி ஏந்தியபடி சுற்றி திரிந்ததாகவும், வன பகுதிகளில் மீண்டும் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் உள்ளதாகவும், போலீசாருக்கு ரகசிய தகவல் வந்ததாக தெரிகிறது.