மதுரை: நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் கைதான வேலூர் மாணவருக்கு ஐகோர்ட் கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் உதித்சூர்யா பிடிபட்டார். இதைத்தொடர்ந்து உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் மற்றும் சென்னையை சேர்ந்த தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பிரவீன் (21), இவரது தந்தை சரவணன் (44), ராகுல் (20), இவரது தந்தை டேவிட் (47) மற்றும் தர்மபுரி மாவட்டம், கடகத்தூர் அருகே உள்ள மூங்கிலான்கோட்டையை சேர்ந்த மாணவி பிரியங்கா, இவரது தாய் மைனாவதி, வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த மாணவர் முகமது இர்பான், இவரது தந்தை முகமது சபி ஜான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மாணவர்களான உதித்சூர்யா, ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு ஐகோர்ட் மதுரை கிளை ஜாமீன் வழங்கியது. இதைத்தொடர்ந்து, மற்றொரு மாணவரான முகமது இர்பானின் ஜாமீன் மனு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.