இணையதளத்தின் மூலம் பிஎப் கணக்கு எண்ணை ஊழியரே உருவாக்கலாம் : புதிய திட்டம் துவக்கம்

புதுடெல்லி: ‘ பிஎப் இணையதளத்தில் ஊழியர்களே தங்களின் ஒருங்கிணைந்த கணக்கு எண்ணை உருவாக்கலாம்,’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் 6 கோடி ஊழியர்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் சந்தாதாரர்களாக உள்ளனர். இந்த அமைப்பு, 12.7 லட்சம் கோடி ரூபாயை கையாண்டு வருகிறது. இந்நிலையில், பல்வேறு நிறுவன ஊழியர்கள் தாங்கள் பணியாற்றும் நிறுவனங்கள் மூலம் ஒருங்கிணைந்த கணக்கு எண்ணை (யுஏஎன்) உருவாக்கி வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம், ஆயுள் காப்பீடு போன்ற பலன்களை பெற்று வருகின்றனர். அவர்கள் வேறு இடத்திற்கு பணி மாறும் போது, தங்களின் பிஎப் பணத்தை பெறுவதற்கு ஏற்கனவே பணியாற்றிய நிறுவனம் மூலம் விண்ணப்பிக்க வேண்டியிருக்கிறது.

இதை தவிர்த்து வாழ்நாள் முழுமைக்கும் ஒரே யுஏஎன் எண்ணை பெறும் வகையிலும், எந்த நிறுவனத்தையும் சாராமல் இருக்க ஆன்லைன் முறையில் இந்த எண்ணை உருவாக்கும் முறையும் நேற்று தொடங்கப்பட்டது. இபிஎப்ஓ நிறுவனத்தின் 67வது நிறுவன நாளையொட்டி தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் கங்க்வார் இந்த சிறப்பு வசதியை டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் பிஎப் செலுத்தும் ஊழியர்கள் அவர்கள்  பணியாற்றிய நிறுவனங்களை சாராமல் தங்கள் பிஎப் பணத்தை பெற முடியும்.

Related Stories: