நடிகர் செந்தில் வீட்டை வாடகைக்கு எடுத்து மோசடி : சினிமா புரொடக்சன் மேனேஜர் கைது

சென்னை: நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள அடுக்குமாடி வீட்டை வாடகைக்கு எடுத்து மற்றவர்களுக்கு லீசுக்கு விட்டு மோசடியில் ஈடுபட்ட சினிமா புரொடக்சன் மேனேஜரை போலீசார் கைது செய்தனர். நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு சொந்தமாக சாலிகிராமம் பாஸ்கர் காலனி, பார்த்தசாரதி தெருவில் பல கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 10 அறைகள் உள்ளன. இந்த குடியிருப்பை கடந்த 2013ம் ஆண்டு சாலிகிராமம் பாஸ்கர் காலனியை சேர்ந்த சினிமா புரொடக்சன் மேலாளர் சகாயராஜ் (52) என்பவருக்கு ஒப்பந்தப்படி 15 லட்சம் முன்பணம் பெற்று கொண்டு மாதம் வாடகையாக ₹2.60 லட்சத்திற்கு விட்டுள்ளார். அதன்படி சகாயராஜ் கடந்த 6 ஆண்டுகளாக முறையாக வாடகை கொடுத்து வந்தார். திடீரென கடந்த 6 மாதங்களாக அடுக்குமாடி குடியிருப்புக்கான வாடகையை கொடுப்பதை நிறுத்திவிட்டார்.

இதனால் சந்தேகமடைந்த நடிகர் செந்தில் பலமுறை சகாயராஜிக்கு போன் செய்துள்ளார். ஆனால், அவர் போனை எடுக்க வில்லை. உடனே நடிகர் செந்தில் சாலிகிராமத்தில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்புக்க சென்று பார்த்தார். அப்போது, கட்டிடத்தில் வாடகைக்கு உள்ள  நபர்களிடம் கேட்ட போது, சகாயராஜ் அடுக்குமாடி குடியிருப்பு என்னுடையது என்று கூறி எங்களிடம் பல லட்சத்திற்கு முன்பணம் வாங்கிக்கொண்டு லீஸ் மற்றும் வாடகைக்கு விட்டுள்ளதாக தெரிவித்தனர். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த நடிகர் செந்தில், உடனே சம்பவம் குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சகாயராஜ் நடிகர் செந்திலுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்து அதன்மூலம் தனது கட்டிடம் தான் என்று பலரிடம் லீஸ் மற்றும் வாடகைக்கு விட்டு பல லட்சம் ரூபாய் மோசடி செய்து இருந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் சினிமா புரொடக்சன் மேலாளர் சகாயராஜ் மீது 406,420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். நகைச்சுவை நடிகரிடம் வீட்டை வாடகைக்கு எடுத்து மோசடி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: