மதுரை: நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்ட வழக்கில் கைதான தர்மபுரி மாணவிக்கு ஜாமீன் வழங்கிய ஐகோர்ட் மதுரை கிளை, அவரது தாயின் மனுவை தள்ளுபடி செய்தது. மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்கைக்கான நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் உதித்சூர்யா பிடிபட்டார். இதைத் தொடர்ந்து உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் மற்றும் சென்னையை சேர்ந்த தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பிரவீன் (21), இவரது தந்தை சரவணன் (44), ராகுல் (20), இவரது தந்தை டேவிட் (47) மற்றும் தர்மபுரி மாவட்டம், கடகத்தூர் அருகே உள்ள மூங்கிலான்கோட்டையை சேர்ந்த மாணவி பிரியங்கா. இவரது தாய் மைனாவதி, தர்மபுரியை சேர்ந்த மாணவர் இர்பான், இவரது தந்தை முகமது சபி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.