விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ரயில்வே இருவழிப்பாதைக்கு நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள 30 தொழிலாளர்களுக்கு 10 மாதமாக ஊதியம் நிலுவையில் இருப்பதை கண்டித்து கலெக்டர் சிவஞானத்திற்கு, தாசில்தார் ராமநாதன் வாட்ஸ்அப்பில் அனுப்பிய தீபாவளி வாழ்த்து வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில், ரயில்வே இருவழிப்பாதைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்காக, தலா ஒரு தாசில்தார் தலைமையில் 15 பேர் கொண்ட இரண்டு குழுக்கள் கடந்த பிப்ரவரியில் அமைக்கப்பட்டன. இதில், முதல் குழு கொக்கலாஞ்சேரி முதல் ஆர்.ஆர்.நகர் வரையிலும், இரண்டாவது குழு ஆர்.ஆர்.நகர் முதல் கோவில்பட்டி வரையும் நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. குழுக்கான அலுவலகம் வாடகைக்கு பிடித்துள்ளனர். அதற்கான மின்கட்டணம், குடிநீர் கட்டணம், அலுவலக பர்னிச்சர்கள் அனைத்தும் கடனுக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. அலுவலக வாடகை 10 மாதங்களாக நிலுவையில் உள்ளது. குழுக்களைச் சேர்ந்த 30 பேருக்கு 10 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஆனால், இப்பணிக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதி ரூ.40 கோடி தமிழக அரசிடம் உள்ளது.இந்நிலையில், ஒரு குழுவின் தலைவராக உள்ள தாசில்தார் ராமநாதன், கலெக்டர் சிவஞானத்திற்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ள தீபாவளி வாழ்த்து வைரலாகி வருகிறது. அந்த வாழ்த்தில், ‘‘தாங்கள் இந்த மாவட்டத்தில் கலெக்டராக பொறுப்பேற்று 3 ஆண்டு நிறைவடைந்து, 4வது ஆண்டு நடக்கிறது. இந்த 3 ஆண்டுகளில் அரசிடமிருந்து நிதி பெற்று தங்களது மாத ஊதியம், வருட ஊதிய உயர்வு, அகவிலைப்படி நிலுவை, பயணப்படி, ஊதிய நிர்ணயக்குழுவின் நிலுவை அனைத்தும் பாக்கியில்லாமல் பெற்று, தங்களது குடும்ப வாழ்வாதாரத்தை பாதுகாப்பாக வைத்துக் கொண்டீர்கள்.