துரைப்பாக்கம்: சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில், கடந்த 6 வருடங்களுக்கு மேலாக சாய்ராம் கிளினிக் இயங்கி வந்தது. இந்த கிளினிக்குக்கு, அதே பகுதியை சேர்ந்த சாதிக் (36) என்பவர், காய்ச்சல் காரணமாக நேற்று முன்தினம் சென்றார். அங்கிருந்த டாக்டர் வெண்மணியிடம் (23) காய்ச்சல் என்று சாதிக் கூறியுள்ளார். இதையடுத்து அவருக்கு சளி, இருமலுக்கான மருந்து எழுதி கொடுத்து, ஊசி போட வேண்டும் என்று டாக்டர் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சாதிக், ‘’காய்ச்சலுக்காக வந்த என்னை பரிசோதிக்காமலேயே சளி, இருமலுக்கான மருந்து கொடுக்கிறீர்களே’’ என்று கேட்டுள்ளார்.அதற்கு அந்த டாக்டர், ‘‘நோயாளியை பார்த்த உடனே அவர்களுக்கு என்ன பிரச்னை என எனக்கு தெரிந்துவிடும். நான் சொல்வதை கேளுங்கள்,’’ என கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த சாதிக், ‘‘உங்கள் அடையாள அட்டை மற்றும் பதிவு எண்ணை காட்டுங்கள்’’ என்று கூறியுள்ளார். அப்போது, முன்னுக்கு பின் முரணாக வெண்மணி பேசியதால், சாதிக் தனது நண்பர்களை அங்கு வரவழைத்தார். அவர்கள் வந்ததும், வெண்மணியின் அடையாள அட்டையை காட்டும்படி வற்புறுத்தினர்.