ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 4 மாதங்கள் அவகாசம் நீட்டிப்பு

சென்னை : ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு மேலும் 4 மாதங்கள் அவகாசம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. விசாரணை ஆணையம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், தற்போது விசாரணைக்கு இடைக்கால தடை உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை கடந்த 2017ம் ஆண்டு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், அமைச்சர்கள் என 150க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவர்கள் உட்பட அதிகாரிகள் பலரிடம் விசாரணை நடத்தி வந்தது.

இந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தில் சாட்சி அளிக்கும் போது தாங்கள் கூறும் தரவுகள் தவறாக புரிந்துக் கொள்ளப்படுவதாகவும், எனவே மருத்துவக் குழு அமைக்கப்பட்டு அதன் முன்னிலையில் தங்களிடம் ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிடுமாறும் கோரி அப்போலோ மருத்துவமனை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அப்போலோ மருத்துவமனை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனு விசாரணையின் போது, ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ஜெயலலிதா மரண விவகாரத்தில் எதையோ மறைக்கும் நோக்கத்தில் விசாரணைக்கு அப்போலோ தடை கோருகிறது என ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. ஏதோ உள்நோக்கத்துடனேயே மருத்துவர்களையும் விசாரணைக்கு அனுப்ப அப்போலோ மருத்துவமனை மறுக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, விசாரணை ஆணையத்திற்கு விதித்துள்ள இடைக்கால தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனிடையே, விசாரணை ஆணையத்திற்கு தமிழக அரசு வழங்கிய அவகாசம் நிறைவடையுள்ள நிலையில், 6வது முறையாக 4 மாதங்கள் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு கடந்த ஜூன் மாதம் 5 வது முறையாக 4 மாத காலம் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: