மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ராகு, கேது வெள்ளி கவசங்கள் குடந்தை கோர்ட்டில் ஒப்படைப்பு

கும்பகோணம்: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 3 வெள்ளி கவசங்களை கும்பகோணம் கோர்ட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஒப்படைத்தனர். இந்த சிலைகளை உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் புன்னை வனநாதர் சன்னதியில் பழமையான மயில் சிலை மாற்றப்பட்டு புதிய மயில் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதில் பெரியளவில் முறைகேடு நடந்துள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் பக்தர் ரங்கராஜன்நரசிம்மன் என்பவர் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் புகார் செய்தார்.இந்த புகாரையடுத்து கோயில் தலைமை ஸ்தபதி முத்தையா, முன்னாள் ஆணையர் தனபால் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளனர்.

இந்நிலையில் கபாலீஸ்வரர் கோயிலில் இருந்த மயில் மற்றும் ராகு, கேது சுவாமிகளின் வெள்ளி கவசங்கள் பாதுகாப்பு கருதி கும்பகோணம் கோர்ட்டில் நேற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஒப்படைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் உள்ள உலோக திருமேன பாதுகாப்பு மையத்தில் 3 வெள்ளி கவசங்களை வைக்க நீதிபதி மாதவராமானுஜம் உத்தரவிட்டார். இதைதொடர்ந்து  பாதுகாப்பு மையத்துக்கு 3 வெள்ளி கவசங்கள் மாற்றப்பட்டன.

Related Stories: