தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகரில் இரவில் தொடரும் மின்தடை மற்றும் கொசுத்தொல்லையிலிருந்து மக்களை காப்பாற்றக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் நூதன போராட்டம் நடத்தினார். ஆறுமுகநேரியை சேர்ந்த சமூக ஆர்வலர் தொண்டன் சுப்பிரமணி என்பவர் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் கொசு வலைக்குள் மண்ணென்ணை விளக்கை வைத்துக்கொண்டு தூங்குவதுபோல் நூதன போராட்டம் நடத்தினார்.
பின்னர் கலெக்டரிடம் அவர் அளித்துள்ள மனுவில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இரவில் மின்விசிறி இல்லாமல் கொசுக்கடியில் மக்கள் அவதிப்படுகின்றனர். மின்தடை சம்பவங்களால் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களும் அதிகரித்துள்ளன. எனவே இரவில் மின்தடை ஏற்படாமல் தடுக்கவும் கொசு தொல்லையிலிருந்து மக்களை காப்பாற்றவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.