கொடைக்கானல்: தொடர்மழையால் கொடைக்கானல் பழைய குடிநீர் தேக்கம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கொடைக்கானல் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இப்பகுதி மக்களின் குடிநீர் விநியோகத்திற்கு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ஒரு அணை, திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ஒரு அணை என 2 அணைகள் உள்ளன. போதிய மழையின்றி கடந்த பல மாதங்களுக்கு முன்பு இந்த 2 அணைகளும் முற்றிலுமாக வற்றும் நிலை ஏற்பட்டது. இதனால் குடிநீர் பஞ்சத்தில் சிக்கி கொடைக்கானல் நகர் மக்கள் தவித்து வந்தனர். இந்நிலையில் கொடைக்கானலில் கடந்த 2 வாரங்களாக பெய்து வரும் கனமழையால் ஓராண்டுக்கு பின் பழைய குடிநீர் தேக்கம் தனது முழு கொள்ளளவான 22 அடியை எட்டி மறுகால் வழிந்து ஓடுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய குடிநீர் தேக்கத்தில் தனது முழு கொள்ளளவான 26 அடியில் 23 அடி வரை தண்ணீர் இருப்புள்ளது என்றும், தொடர்மழை பெய்யும் பட்சத்தில் 3 நாட்களுக்குள் இந்த குடிநீர் தேக்கமும் நிரம்பி விடும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.